குற்றப்பரம்பரைச் சட்டம்
. ரௌலட் சட்டத்தைவிடக் கொடுமையானது "குற்றப்பரம்பரைச்
சட்டம்'. வடஇந்தியாவில்
கள்ள நாணயம் தயாரிப்பவர்களைக் கட்டுப்படுத்த, 1860-களில் இச்சட்டம்
இயற்றப்பட்டது. சில பழங்குடியினரை உள்ளடக்கி 1871-இல் இச்சட்டம்
மாற்றி அமைக்கப்பட்டது.
பின்னர் ஆங்கில அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தி
தண்டிக்கும் வகையில் 1911-இல் இச்சட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. 1913-இல் சென்னை ராஜதானியில் இச்சட்டம்
அமலுக்கு வந்தது. இச்சட்டப்படி,
1) மாவட்ட ஆட்சித்தலைவர் எந்த ஒரு
சாதியையும் "குற்றப்பரம்பரை' என அறிவிக்கலாம்.
அதை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது.
2) குற்றவாளி - நிரபராதி என்ற பாகுபாடு
கிடையாது. ஒரு சாதியில் பிறந்த அனைவரும் "பிறவிக் குற்றவாளிகள்' என்றது அச்சட்டம்.
3) அச்சாதியில் பிறந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையைக் காவல் நிலையத்தில் பதிவு செய்ய
வேண்டும்.
4) இரவில் ஆண்கள் யாரும் தங்கள் வீட்டில்
தூங்கக்கூடாது. காவலர் கண்காணிப்பில்
பொது மந்தை அல்லது காவல் நிலையத்தில்தான் தூங்க வேண்டும். வயதானவர், புதிதாகத் திருமணமானவர்கட்கும்
விதி விலக்கு கிடையாது.
5) பக்கத்து ஊருக்குச் செல்வதாக இருந்தாலும்
கடவுச்சீட்டு பெறவேண்டும். இந்த விதிகளை மீறினால் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.
6) கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே வந்தால், தலையாரி கூட அவரைக் கைது செய்யலாம்.
7) சந்தேகப்படும்படி ஒருவர்
நடந்துகொண்டால்கூட 3 ஆண்டு சிறைத்தண்டனை உண்டு. இந்த சட்டத்தின் கீழ், ஒரு தீப்பெட்டியும், கத்தரிக்கோலும் கையில் இருந்தது என்பதற்காக ஒருவர் மீது
குற்றவழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இப்படி ஏராளமான அடக்குமுறைப்பிரிவுகள்
அச்சட்டத்தில் இருந்தன.
மக்களின் எதிர்ப்பலை:
"குற்றப்பரம்பரைச் சட்டம்', அப்பாவி மக்களிடம்
எதிர்ப்பலையைக் கிளப்பியது. 25.11.1915 அன்று மதுரை மாவட்ட பிறமலைக் கள்ளர் வாழ்ந்த
பகுதியில் உறப்பனுரைச் சேர்ந்த சிவனாண்டித்தேவன், பிரபல வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் மூலம்
சென்னை மாகாண ஆளுனருக்கு ஒரு ஆட்சேபனை மனுவினை அனுப்பி
வைத்தார். அம்மனுவில் கீழ்க்கண்ட விவரங்களைக் குறிப்பிட்டிருந்தார்.
1) 1860-ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டப்படி
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர, ஒட்டு மொத்த சமுதாயத்தையும் குற்றவாளிகள்
என விளம்புவது சமூக நீதிக்கு எதிரானது.
2) விவசாயமே எங்கள் வாழ்வாதாரம்.
3) சட்டத்தை மதித்து முறையாக நிலவரி
செலுத்திக் கண்ணியமாக வாழ்ந்து வருகிறோம்.
4) மதுரை திருமலை நாயக்கர், கள்ளர் சமுதாயத்தின் எட்டு நாட்டுக்குத்
தலைமை ஏற்கும் ஆட்சிப் பொறுப்பை எம்மிடம்
ஒப்படைத்ததற்கான தாமிரப் பட்டையங்கள் உள்ளன.
எனவே, நீதிக்குப் புறம்பான இச்சட்டத்தை நிறுத்தி வையுங்கள் என அந்த மனுவில் கேட்டிருந்தார். அவரது நியாயமான கோரிக்கை, மனிதாபிமானமற்ற முறையில் அரசால் நிராகரிக்கப்பட்டது.
No comments:
Post a Comment